Saturday 11 November 2017

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

    இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 

    இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கான அடிப்படை ஜவகர்லால் நேரு அவர்களால் மிக வலுவாக இடப்பட்டது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கூறுகளாக இவர் குறிப்பிடுவது
    1. உலக அமைதி
    2. அணி சேராமை
    3. அடிமை மக்கள் விடுதலை பெறுதல்
    4. இனவேற்றுமை ஒழித்தல்
    5. தனி நபர் மற்றும் தேசிய விடுதலையைக் கட்டிக் காத்தல்
    6. உலகின் பெரும்பகுதி மக்களைப் பிடித்து வாட்டும் ஏழ்மை, நோய் ஆகியவற்றைப் போக்குதல்

    குறிக்கோள்கள்:

  • இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவக் கூடிய சர்வதேச சூழலை உருவாக்குவது
  • உலகமய சூழலுக்கு ஏற்ப இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது
  • வல்லரசு நாடுகளுடனான உறவை பலப்படுத்துவது
  • அண்டை நாடுகளுடனான, தெற்காசிய நாடுகளுடனான நல்லுறவையும், நட்பையும் மேம்படுத்துவது
  • இந்தியாவில் உள்நாட்டு சூழலை சர்வதேச இலக்குடன் ஒன்றிணைப்பது

    இந்தியாவின் இருதரப்பு உறவுகள்:

    இந்திய-அமெரிக்க உறவுகள்:

    இந்திய-அமெரிக்க உறவுகள் (India–United States relations) என்பது குடியரசு இந்தியாவிற்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே உள்ள பன்னாட்டு உறவை குறிக்கும். அணிசேரா இயக்கத்தை உருவாக்கிய நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், இந்தியா, பனிப்போரின் பொழுது சோவியத் ஒன்றியத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது. இது அமெரிக்க ஐக்கிய நாட்டினுடனான உறவில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது. 1991-இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பிறகு இந்தியா, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளினுடனான தனது வெளியுறவுக் கொள்கைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக இந்திய வர்த்தகம், பொருளாதாரம், கணினி நிறுவனங்களின் இணைப்பு ஆகியவை மேம்படத் தொடங்கியது. மேலும் இந்தியாவின் அணுசக்தி திட்டம் பற்றியான தனது கொள்கையை அமெரிக்கா மாற்றிக்கொண்டது. தற்காலத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து கலாசாரம், ராணுவம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் மிகுந்த பங்களிப்புகளில் ஈடுபடுகின்றன.
    .கேல்லப் என்ற நிறுவனம் நடத்திய பொது கருத்துக் கணிப்பின்படி, அமெரிக்கர்கள் உலகில் உள்ள நாடுகளிலேயே இந்தியாவை ஏழாவது அபிமான நாடாக கருதுகின்றனர். 2012 ஆம் ஆண்டின்படி, அமெரிக்காவில் பயிலும் பன்னாட்டு மாணவர்களுள், இந்திய மாணவர்கள் இரண்டாவது பெரிய குழுமமாகும்.

    சமீபத்திய உறவுகள்:

    21ஆம் நாற்றாண்டில் இந்தியா அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்கு மிக முக்கியமானதாக அமைந்தது. நூறு கோடி மக்கள் நிறைந்ததும், இந்திய துணைக் கண்டத்தில் ஆதிக்கமுடையதுமான இந்தியா, வளர்ந்து வரும் வல்லரசாகவும், அமெரிக்காவிற்கு இன்றியமையாத சகோதர நாடாகவும், சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்கொள்ளத்தக்கதாகவும் கருதப்படுகிறது. 2004இல் 2008 வரையிலான காலத்தில் இருதரப்பு வர்த்தகமும் மும்மட்ங்காக உயர்ந்துள்ளது. நவம்பர் 2010இல் இந்தியா வந்த பராக் ஒபாமா, இந்திய நாடாளுமன்றத்தின் இணைக்கூட்டத்தில் கல்ந்து கொண்டு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் இடம்பெறுவதற்கான இந்தியாவின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தார்.

    இராணுவ உறவுகள்:

    இரு நாடுகளின் இராணுவ உறவுகளும் சுதந்திரம், ஜனநாயகம், சட்ட ஒழுங்கை கடைப்பிடித்தல், பொதுவான பாதுகாப்பு நலன்கள், ஆகியவையின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவது, வன்முறை தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை தோற்கடிப்பது, பேரழிவு ஆயுதங்கள் மற்றும் அதில் தொடர்புடைய பொருட்கள், தரவு, மற்றும் தொழில்நுட்பங்கள் பரவுவதை தடுப்பது, மற்றும் வர்த்தகத்தை பாதுகாப்பது ஆகியவைய இதனுள் அடங்கும்.
    2001 ஆம் ஆண்டின் செப்டம்பர் இறுதியில், அமெரிக்க அதிபர் புஷ் அணு ஆயுத பரவல் தடை தடுப்பு சட்டத்தின் கீழ் இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகளை முற்றிலுமாக விலக்கினார். இந்தியா சர்வதேச மரபுகளை எதிராக அணு ஆயுதங்களை உருவாக்கியதாலும், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் (NNPT) கையெழுத்திடாததாலும் அமெரிக்கா இந்தியாவுடன் அணு ஒத்துழைப்பு எதிர்த்து வந்தது. ஆனால், டிசம்பர் 2006 இல், அமெரிக்க காங்கிரஸ், 30 ஆண்டுகளில் முதல் முறையாக, ஹென்றி ஜே ஹைட் அமெரிக்க இந்திய அமைதியான அணு ஒத்துழைப்பு சட்டத்தை தாக்கல் செய்து, இந்தியாவிற்கு நேரடி அணுசக்தி வணிகம் செய்ய அனுமதி அளித்தது.

    இந்தியா-ஜப்பான் உறவுகள்:

    இந்தியாவும் ஜப்பானும் காலம்காலமாக நல்லுறவுகளைப் பேணிவந்திருக்கின்றன. நூற்றாண்டுகளாக இந்தியாவும் ஜப்பானும் கலாச்சார பரிமாற்றங்களை பகிர்ந்துள்ளன. குறிப்பாக ஜப்பானின் முக்கிய சமயமான புத்த மதம் இந்தியாவில் பிறந்த புத்தரால் உருவாக்கபட்டதாலும் அதிக பிணைப்புகளை கொண்டுள்ளதற்கு ஒரு காரணமாக உள்ளது. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் இராணுவமும் சுபாசு சந்திர போஸின் தலைமையில் துவங்கப்பட்ட இந்திய இராணுவத்துடன் கூட்டமைத்து பிரித்தானியப் படையை எதிர்த்தது. இந்தியாவின் கட்டமைப்புப் பணிகளுக்கு அதிகம் நிதியுதவி செய்யும் நாடுகளில் ஜப்பானும் முன்னிலையில் உள்ளது. டெல்லி மும்பை இடையிலான தொழில்துறைக் கட்டமைப்புக்கு உதவியது.[1]
    ஜப்பானிய நிறுவனங்களான சோனி, டொயோட்டா, ஹோண்டா போன்றவை இந்தியாவில் உற்பத்தி மையங்களை அமைத்துள்ளன. ஜப்பான் நிறுவனங்களுக்கு இந்தியா முக்கிய வியாபார சந்தையாக விளங்குகிறது. ஜப்பானின் கார் தயாரிப்பு நிறுவனமான சுசுகி இந்தியாவில் கூட்டு நிறுவனமாக மாருதி சுசூக்கி என்கிற பெயருடன் கார் தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவியுள்ளது.

    வர்த்தக உறவுகள்:

    இந்தியாவும் ஜப்பானும் 2011-ல் ஒருங்கிணைந்த சுதந்திர வர்த்தக உடன்பாடு செய்துகொண்டன . ஆனால் அதன் பிறகும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் அதிகரிக்கவில்லை.உதாரணமாக , 2012-13-ல் ஜப்பான் இந்தியா இடையிலான இருதரப்பு வர்த்தக மதிப்பு சுமார் ரூ. 1,11,660 பில்லியனாக இருந்தது. ஆனால், இது இந்தியாவின் மொத்த வர்த்தக மதிப்போடு ஒப்பிட்டால் 2.2% முதல் 2.5%தான். அதுவும் ஜப்பானின் மொத்த வர்த்தக மதிப்போடு ஒப்பிட்டால் வெறும் 1%தான்.

    பாதுகாப்பு தொடர்பான உறவுகள்:

    2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக ஜப்பான் பிரதமர் சின்சோ அபே கலந்துகொண்டார்.அவர் வருகையின்போது எடுக்கப்பட்ட முடிவுகளில், ‘ஜப்பானில் புதிதாக நிறுவப்பட்டுள்ள தேசியப் பாதுகாப்பு ஆணையத்துடன் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அடிக்கடி ஆலோசனை கலப்பது’ என்ற முடிவும் அடங்கும் . இந்தியக் கடற்படையும் ஜப்பானியக் கடற்படையும் 2013-ல் சென்னை அருகில் கடலில் கூட்டாகப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டன. இம்மாதிரியான கூட்டுப் போர் ஒத்திகைகளை இனி தொடர்ந்து அடிக்கடி மேற்கொள்ளும் முடிவும் எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment