Thursday 26 October 2017

ஸ்டீவ் ஜொப்ஸ்

ஸ்டீவ் ஜொப்ஸ்

 ஸ்டீவ் ஜொப்ஸ் (தமிழக வழக்கு: ஸ்டீவ் ஜாப்ஸ்) (Steve Jobs, பிறப்பு பெப்ரவரி 24, 1955- அக்டோபர் 5, 2011) ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை ஆட்சியரும், கணினித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமையாளரும் ஆவார். இவர் 1985 ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டரசு, அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை செய்யும் அந்நாட்டின் தலையாய பரிசாகிய தொழில்நுட்பத்துக்கும் புதுமையாக்கத்துக்குமான பதக்கத்தை வென்றார்.
ஸ்டீவ் ஜொப்ஸ், 1976 இல் ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். இவர் பிக்ஃசார் அசைபட நிறுவனத்தின் (Pixar Animation Studios) தலைமை ஆட்சியராகவும், வால்ட் டிசினி (Walt Disney) போன்ற பல நிறுவனங்களின் ஆட்சிப் பேராய இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்தார். ஆகத்து 24, 2011 அன்று உடல்நிலை காரணமாக தலைவர் பதவியிலிருந்து விலகினார். இவரையடுத்து டிம் குக் பொறுப்பேற்றார்.[12] 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் 06 ஆம் திகதி அதிகாலை அவர் உயிரிழந்தார்.[13]
ஸ்டீவ் ஜொப்ஸ், 1970களின் பிற்பகுதியில் ஸ்டீவ் வோசினியாக் (Steve Wozniak), மார்க் மார்குலா (Mike Markkula) ஆகியோருடன் சேர்ந்து ஆப்பிள் நிறுவனத்தை நிறுவினார். 1980களின் முற்பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் திறம்மிக்க மாக்கிண்ட்டாசு (Macintosh) கணினியை அறிமுகப்படுத்தினார். நிறுவன உள்பிணக்குகளால் 1985 இல் ஆட்சிப் பேராயத்தாருடன் மோதி, ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியேறி உயர்கல்வி நிறுவனத் தேவையை முதன்மைப்படுத்தி நெக்ஸ்ட் (NeXT) என்னும் கணினித்தளம் நிறுவனத்தை உருவாக்கினார். ஆனால் 1996 இல் ஆப்பிள் நிறுவனம் நெக்ஃசிட்டு நிறுவனத்தை வாங்கிய பின், ஸ்டீவ் ஜாப்ஸ் தான் உடன் நின்று உருவாக்கிய ஆப்பிள் நிறுவனத்திலேயே சேர்ந்தார். அங்கு முதன்மை செயலாட்சியராக (CEO) 1997முதல் 2011 வரை நீடித்தார்.

தொடக்கக்கால வாழ்க்கை

ஸ்டீவ் ஜொப்ஸ், திருமணம் ஆகாத இரண்டு பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பிறந்தார். இவரின் பெற்றோர் சோஆன் சீப்லெ (Joanne Schieble), சிரியா நாட்டினரான அப்துல்ஃவட்டா சண்டாலி ஆகியோர். ஆனால் கலிபோரினியாவில் இருந்த இரண்டு தொழிலாளர் குடும்ப இணையர் பால் ஜொப்ஸ், கிளாரா ஜொப்ஸ் ஆகியோர் தத்து எடுத்து வளர்த்து ஆளாக்கினர்[1]. ஜொப்ஸ் தத்து எடுத்த சில மாதங்களிலேயே, அவருடைய பிறப்புப் பெற்றோர் திருமணம் செய்துகொண்டனர்; அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் அப்பெண்குழந்தை தான் வளர்ந்த மங்கை ஆன பின்னரே தன் அண்ணனைப் பற்றி அறிந்தாள்.
1974ம் ஆண்டு ஆன்மீக அமைதி தேடி ஸ்டீவ் ஜாப்ஸ் இந்தியா வந்தார். பின், உத்திர பிரதேசத்தில் உள்ள கைஞ்சி ஆசிரமத்திற்கு தனது கல்லூரி நண்பருடன் சென்று நீம் கரோலி பாபாவை தரிசனம் செய்தார். அவரது போதனைகளில் மனம் மாறிய ஜாப்ஸ், அவரை தன்னுடைய ஆன்மிக குருவாக ஏற்றுக்கொண்டார். அதுவே அவர் புத்த மதத்தை தழுவக் காரணமாக இருந்தது.

ஸ்டீவ் ஜாப்ஸ் பேச்சு

கம்ப்யூட்டர் வல்லுநர் என அறியப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ், சிறந்த பேச்சாளர். 2005ஆம் ஆண்டு ஜூன் 12ம் தேதி கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவரது பேச்சு பலராலும் பாராட்டப்பட்டது. "அந்த உரையின் தொகுப்பு:" நான் கல்லூரியில் பட்டப்படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. நான் என் வாழ்வில் தொடர்புடைய மூன்று கதைகளை உங்களுடன் பகிர்ந்தளிக்க விரும்புகிறேன்.

முதல் கதை :

புள்ளிகளை இணைப்பது: நான் பிறக்கும் போது எனது தாய், தந்தை படித்துக் கொண்டிருந்தனர். என்னை மற்றொருவருக்கு தத்துக் கொடுத்தனர். அவர்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், என்னை குறையின்றி வளர்த்தனர். அப்போது படிப்பை தொடர வேண்டாம் என முடிவெடுத்தேன். நண்பர்கள் உதவியுடன் அவர்கள் வீட்டின் தரையில் படுத்தேன். கோவில்களில் சாப்பிட்டேன். கஷ்டங்கள் தான் என்னுள் இருந்த உள்ளுணர்வையும் தன்னம்பிக்கையும் வளர்த்தன. பத்து ஆண்டு உழைப்பின் பயனாக, "மெகின்டோஷ்' கம்ப்யூட்டரை வடிவமைத்தேன். எனது முதல் கம்ப்யூட்டர், "டைப்போகிராபி '(அச்சுக் கலை) கொண்டது.

2வது கதை :

லவ் அண்ட் லாஸ்: நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. 20 வயதில் என் வீட்டில் ஆப்பிள் நிறுவனத்தை துவக்கினேன். 10 ஆண்டு உழைப்பிற்கு பின் 2 பில்லியன் டாலர்களுடன் 4,000 பேரை வேலையில் அமர்த்தியது என் நிறுவனம். 30 வயதில் என்னுள் எழுந்த வெறிக்கு அளவே இல்லை. அப்போது என் நிறுவனத்திலிருந்து நான் வெளியேற்றப்பட்டேன். வாலிப பருவத்திற்கு மீண்டும் தள்ளப்பட்டேனா என என்னுள் கேள்விகளை கேட்டுக் கொண்டேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் "நெக்ஸ்ட்' மற்றும் "பிக்ஸர்' ஆகிய நிறுவனங்களை துவக்கினேன். அப்போது தான் என் வாழ்வில் காதல் மலர்ந்தது. "பிக்ஸரில்' முதல் கம்ப்யூட்டர் அனிமேஷன் சினிமாவான "டாய் ஸ்டோரி' உருவானது. இன்று உலகின் சிறந்த அனிமேஷன் ஸ்டூடியோவாக இது உள்ளது. சில காலம் கழித்து ஆப்பிள் நிறுவனம், "நெக்ஸ்ட்டை' வாங்கியது. நான் மறுபடியும் புதிய உத்வேகத்துடன் ஆப்பிளில் இணைந்தேன்.

மூன்றாவது கதை:

இறப்பு: சிறு வயதில் ஒரு வாசகம் எனக்கு ரொம்ப பிடிக்கும். " உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக நினைத்து வாழ்ந்தால், ஒரு நாள் அது நிறைவேறும்' என்பதே அந்த வாசகம். இதை நான் எப்போதும் கடைபிடிப்பேன். தினமும் காலையில் எழுந்து கண்ணாடியில் முகம் பார்க்கையில் இன்றே நமக்கு இறுதி நாள் என்று நினைத்துக் கொண்டு வேலைகளை துவக்குவேன். கடந்த ஆண்டு எனக்கு கணையத்தில் புற்றுநோய் இருப்பது, பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது கணையம் என்பது என்ன என்று கூட எனக்கு தெரியாது. டாக்டர்கள் என்னிடம், இது குணமாக்க இயலாத நோய். உங்களின் வாழ்நாள் இன்னும் மூன்று அல்லது ஆறு மாதங்கள் மட்டுமே என்றனர். அதன் பின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது நான் நலமாக உள்ளேன். ஆனால், எனது வாழ்நாள் இறுதிக் கட்டத்தை நோக்கி செல்வது எனக்கு தெரியும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறைவு. அதை வீணாக்காதீர்கள். மற்றவர்கள் கூறிய கருத்துகளை வேதவாக்காக கொண்டு, வாழ்க்கையை நிர்ணயிக்காதீர்கள். உள்ளுணர்விற்கு மதிப்பளியுங்கள். "பசியோடு இருங்கள்; புதிய சிந்தனைகளோடு வாழுங்கள்'. இந்த வாசகத்துடன் உரையை முடித்தார்.


No comments:

Post a Comment